07 February, 2010 by admin
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துப் போட்டியிடுவதா அல்லது ஆளும் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவதா என முடிவெடுப்பதற்காக இன்று உயர் மட்டக் கூட்டம் ஒன்று நடந்தது. த.ம.வி.பு அமைப்பின் தலைவரும், கிழக்கு மாகாண முதல்வருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று சனிக்கிழமை காலையில் தொடங்கிய கூட்டம் இன்று இரவு வரை நடந்தது. இக்கூட்டத்தில் தமது கருத்துக்களைக் கூறிய கட்சியின் உயர்மட்டத்தினர் பலரும், தமது கட்சி தனித்து நின்றே போட்டியிடவேண்டும் எனக் கூறியிருந்தனர். ஒரு சிலர் மட்டும் ஆளும் கட்சியின் சின்னத்தின்கீழ் போட்டியிடலாம் எனக் கருத்துக் கூறியிருந்தனர்.
தமது கட்சியின் தேர்தல் குறித்த தீர்மானங்களால் ஆளும் கட்சியுடன் தமக்கு பிணக்கு ஏற்படும் நிலை வரக்கூடாது என்பதிலும் த.ம.வி.பு கட்சி கவனம் செலுத்தி வருகின்றதாம். எனவேதான் வருகின்ற புதன்கிழமை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேசலாம் என பிள்ளையான் முடிவு செய்துள்ளாராம். அன்றைய தினம் பேச்சுக்கள் முடிவுற்றதும் த.ம.வி.பு கட்சியின் தேர்தல் போட்டி குறித்த நிலைப்பாடு அறிவிக்கப்படவுள்ளதாம்.