08 February, 2010 by admin
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினமான ஜனவரி 27 அன்று இலங்கை அரசைக் கவிழ்க்கவும், மஹிந்த ராஜபக்ஷவைக் கொலைசெய்யவும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா சதித்திட்டம் தீட்டியதாக இலங்கை அரசு கூறி வருகிறது. இதில் சந்தேகப்பட்டவர்கள் எனக் குற்றம்சுமத்தி, ராணுவத்திலிருந்து விலகியவர்கள் சிலரைக் கைது செய்து விசாரணையும் செய்து வருகின்றது. இந்நிலையில் சரத் பொன்சேகா ஹோட்டலில் இருந்த சமயம் அங்குச் சென்றிருந்த ஊடகங்களின் பிரதிநிதிகள் பலரிடமும் விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சு திட்டமிடுவதாக அரச செய்தி தெரிவித்துள்ளது. இவர்களிடம் விசாரணை செய்வதன்மூலம், இவர்களை ஹோட்டலில் வைத்திருந்து சரத் பொன்சேகா என்ன திட்டத்தைத் தீட்டினார் என அறிய முற்படுகின்றதாம் பாதுகாப்புத் தரப்பு.
மேற்படி ஹோட்டலில் சரத்தும் அவர் ஆதரவாளர்களும் தங்கவென 70 அறைகள் எடுக்கப்பட்டிருந்தன. இதேவேளை தேர்தலுக்கு முன்னர் கொகரெல்ல மற்றும் தெனியாய பகுதிகளில் ஆயுதங்கள் சிலவற்றையும் போலீசார் மீட்டிருந்தனர். அந்த ஆயுதங்களும் மஹிந்த கொலைச்சதியுடன் தொடர்புபட்டதென அரசாங்க வலைத்தளச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.