08 February, 2010 by admin
இலங்கை பாராளுமன்றத் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தங்கள் ஏற்கனவே செய்யப்பட்டு வருகின்ற போதும், தேர்தல் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பெரும்பாலும் இப்பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி நடக்கும் எனவும், தற்போதுள்ள பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை நள்ளிரவில் வெளியாகும் என்றும் அரசாங்க உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த உயர் அதிகாரி தனது பெயரை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என நிபந்தனை விதித்துள்ளாராம்.
கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்றம் நாட்டிலுள்ள அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்தால் நீடித்துள்ளது. தற்போது ரஷ்யாவிலுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த, பொதுத் தேர்தலை நடத்தும்பொருட்டு பாராளுமன்றத்தைக் கலைப்பதாக உத்தியோகபூர்வ பத்திரங்களில் நாளைக்கு கையொப்பமிடவுள்ளார் எனவும் மேற்படி அதிகாரி தெரிவித்துள்ளார்.