28 January, 2013 by admin

இலங்கை அரசு மீது அறிவிக்கப்படாத போர் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள் சிலர். இவர்கள் யார் என்று தெரியாத நிலை காணப்படுகிறது. இலங்கை அரசின் பாதுகாப்பு இணையம், பின்னர் ரூபாவாகினி தொலைக்காட்சியின் இணையம், அதன் பின்னர் முதலீட்டுச் சபையின் இணையம் என தொடராக இத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இத் தாக்குதலை நடத்துபவர்கள் யார் என்று தெரியாத நிலையில், இலங்கை அரசு தொடர்ந்தும் மெளனம் சாதித்து வருகிறது. ஊடக அமைச்சிடம் இது குறித்து ஊடகவியலாளர்கள் யாராவது வினவினால், அது அப்படி நடக்கவில்லை, இல்லை என்றால் எனக்கு அதுபற்றித் தெரியாது என்று தான் பதில் வருகிறது. சிங்கள இணையங்களுக்கு இந்த விடையம் தெரிந்திருந்தாலும் இதனை அவர்கள் தமது செய்தியில் வெளியிடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இந் நிலையில், மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனிதவுரிமைக் கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக, சில நாடுகள் இலங்கைக்கு எதிரா கடுமையான ஆதாரங்களை தேடியே இவ்வாறு தாக்குல்களை நடத்துவதாகவும் சிலர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். 2009ம் ஆண்டு யுத்தம் மிக உச்சமாக நடைபெற்றவேளை, ரூபாவாகினி தொலைக்காட்ச்சிப் பிரிவினரே பல வீடியோகளை எடுத்தனர். பின்னர் அவர்கள் ஆன் லைனில் தமது தொலைக்காட்சியை வெளியிட முடிவுசெய்தவேளை, அவர்கள் தம்மிடம் உள்ள பல வீடியோக்களை சேவருக்குள் புகுத்தியுள்ளார்கள்.
சில தினங்களுக்கு முன்னர் ரூபாவாகினி தொலைக் காட்சியின் இணையசேவை, சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி முடக்கப்பட்டது. மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள இச் சேவை மட்டுப்படுத்தப்பட்ட வகையில் தான் இயங்கிவருகிறது. குறிப்பிட்ட தினத்தில் ரூபாவாகினியின் இணையத்தை தாக்கியவர்கள், படு புத்திசாலிகளாகத் தான் இருக்கவேண்டும். காரணம் என்னவென்றால் அவர்கள் , முதலில் இலங்கை அரசின் பாதுகாப்பு மையத்தின் இணையத்தை தாக்கியுள்ளார்கள். இதனால் இலங்கை அரசின் கம்பியூட்டர் அவசரப் பிரிவினர் அதனைச் சரிசெய்துகொண்டு இருக்கும்வேளை, தாக்குதல்காரர்கள் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் ரூபாவாகினி இணையத்தை தாக்கி அங்குள்ள தரவுகளை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
இச் சம்பவமானது, இலங்கை அரசு மீதும், அவர்கள் புரிந்த கொலைக்குற்றங்கள் மீதும் கவனம் செலுத்திவரும் சில நாடுகளை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக அந் நாடுகள் கூர்ந்து கவனித்துவருவதாக அறியப்படுகிறது. ஆனால் இதேவேளை குறிப்பிட்ட இந்த இணையத் தாக்குதல்கள் பொய்யான செய்தி எனவும், இலங்கை அரசே தனது சேவைகள் சிலவற்றை இவ்வாறு முடக்கிவிட்டு, சைபர் தாக்குதல் நடப்பதாக கூறிவருவதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் அதிர்வு இணையத்துக்கு மேலும் தெரிவித்தார் !